இன்று தமிழ்மார்க்ஸ் ட்விட்டர் ஸ்பேசில் தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர் சுகந்தி அவர்களின் பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற எத்தனிக்கும் ஒன்றிய அரசின் முயற்சி குறித்த உரை குறித்து கேட்க வாய்த்தது
தற்போதைய பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயது இருபத்தி இரண்டிற்கும் இருபத்தி நான்கிற்கும் இடையில் ஊடாடும் உண்மையை ஆய்வுகள் தருகின்றன
தற்போது 18 வயது என்று இருக்கும்போதே 15 வயது குழந்தைகளுக்கும் சில நேரங்களில் திருமணம் நடக்கத்தான் செய்கின்றன.குறைந்த வயது திருமண முயற்சிகள் பல தடுத்து நிறுத்தப்படுவதும் வழக்கம் என்பதையும் பள்ளி ஊழியத்தில் 35 ஆண்டுகளாக இருக்கும் நாம் அறிந்ததுதான், இதுவரைக்கும் நாம் அறிந்ததுதான்.ஆனால் அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட திருமணப் பெண் குழந்தைகளின் இன்றைய நிலை என்ன என்று தோழர் சுகந்தி கேட்டபோது தடுத்ததோடு சில நேரங்களில் நாமடைந்த திருப்தியின் அல்ப ஆயுளை நினைத்து கவலை பிறந்தது.பெண்கள் அனைவரும் உயர் கல்வி பயில்வதற்கான சூழலை ஏற்படுத்தினாலே 26 அல்லது 27 வயதுக்கு முன்பாக யாருக்கும் திருமணம் செய்வதற்கான வாய்ப்பே அமையப் போவதில்லை
வேலைக்காக புலம் பெயர்ந்து செல்லும் பெற்றோர் அப்படி புறப்படும் முன் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் என்கிறார் தோழர்.இது உண்மையும்கூட.அனைவருக்குமான வேலைக்கு உத்திரவாதம் தருகிற ஏற்பாட்டை அரசுகள் செய்தாலே எந்த சட்டமும் இல்லாமலே பெண்களின் சராசரி திருமண வயது 25 ஐத் தாண்டிவிடும். போக, 21 என்ற சட்டம் வருமானால் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கான வாய்ப்புகள் உண்டு என்று தோழர் சுகந்தி சொல்வதை போகிற போக்கில் யாரும் நிராகரித்துவிட முடியாது.ஆண்களின் வயது 21 என்பதே ஆணாதிக்கத்தின் குறியீடுதான் என்றும் தோழர் சொல்வது நியாயம்தான்.ஆணுக்கும் பெண்ணிற்கும் திருமண வயது 18 என்பதே சரி என்பதை அனைவரும் ஏற்கவேண்டும் என்றுகூட சுகந்தி சொல்லவில்லை.
விவாதிக்கலாம் வாங்க என்றுதான் அழைக்கிறார்
இதுமாதிரி நல்ல முன்னெடுப்புகளை எடுக்கிற தமிழ் மார்க்சிற்கு என்னுடைய அன்பும் நன்றியும்
இரா. எட்வின்.
27.12.2021.