நவீன தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் – பரணி

நவீன தொழில் நுட்ப உலகில் நாம் பரவலாக நவீன வேலையிடம் ( நவீன தொழிற்சாலைகள் IT நிறுவனங்கள்) என்று அறிவு தளத்தில் பேசுகிறோம், உண்மையில் நவீன வேலை இடம் என்பதற்கு என்ன வரையறை வைக்க முடியும்.?

நவீன வேலையிடம்  என இருந்தால் அதற்கு முன் ஒரு பழைய ( பழைய வேலை பாணி/ நடைமுறை) வேலையிடம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா அது எப்படி இருந்தது ? இவைகள் ஏன் மாறின? இவைகள் எங்கே எதை நோக்கிச் செல்கின்றன ? என்பதை அறியும் பட்சத்தில் மட்டுமே நம்மால் வேலை இடங்களில் சந்திக்கும் நவீன பிரச்சனைகளை அறிய முடியும்.

ஃபோர்டிசம்/போஸ்ட்-ஃபோர்டிசம்:

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டாம் தொழிற்புரட்சியின் காரணமாக உருவான பெரும்பாண்மையான நிறுவனங்கள் ஒரு பொருளை ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்து அதை அந்நாட்டின் சந்தைக்குள் மட்டுப் வணிகம் செய்யும், பின்னர் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர்.

அதாவது மூலதனம் ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் சுருங்கி இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்து பல நாடுகள் காலனித்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற பிறகு மூலதன குவியலுக்குக்கான போட்டியில் மூலதனத்துக்கான எல்லைகள் அழிக்கப்பட்டத. அதாவது ஒரு நாட்டுக்கள் மட்டும் இருந்த மூலதனம் எல்லைகள் கடந்து தனக்கான லாபம் கிடைக்கும் இடத்துக்கு எல்லாம் சென்றது.

அதன் விளைவாகப் பொருள் உற்பத்தி கருவிகள், பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்பம், பொருள் உற்பத்திக்கான உற்பத்தி முறைகள், அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் நிர்வகிக்கும் முறையும், சட்ட திட்டமும் மாற்ற மடைந்தது. இந்த மாற்றங்களின் விளைவால் பெருளதாரம் புதிய வடிவம் பெறுகிறது. அது தான் நாம் பரவலாகப் பேசும் “புதிய தராளமைய” கொள்கை.

இந்த உற்பத்தி முறையை 1988 ராபின் முரே என்கிற ஒரு பொருளாதார அறிஞர் போஸ்ட் போர்டிசம் என்ற சொல்லின் மூலம் அறிமுகப்படுத்தினார். 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் போர்டிசம் என்கிற உற்பத்தி முறைக்குக் குறிப்பிட்ட வரையறை இருந்தன மாஸ் புரொடக்க்ஷன், அசெம்பிளி லைன் உற்பத்தி முறை, தரமான பொருள்(standard product), அறிவியல் பூர்வமான மேலாண்மை (taylorism) போன்று உற்பத்தி முறைகளும், உற்பத்தி கருவிகளும், உற்பத்தி உறவுகளும் அதற்கு ஏற்றாற்போல் மற்றம் அடைந்துள்ளது.

போஸ்ட் போர்டிசம் என்கிற சொற்றொடர் இன்றைய நவீன நிறுவனங்கள் என்று சொல்லப்படுகிற அனைத்துக்கும் அடிப்படை கூறுகளைத் தீர்மானிக்கின்றன. இப்படிப்பட்ட தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் தான் நம் நவீன வேலை இடங்களாகப் பார்க்க வேண்டும். நவீன வேலை இடம் என்ற உடன் நாம் ஏதோ தொழிலாளர்களுக்கு மிகவும் அருமையான சூழல் கொண்ட வேலையிடம் என நாம் கற்பனை செய்து விட கூடாது. உண்மையில் இதற்கு முன் இருந்த வேலை இடங்களைவிட நவீன வேலையிடம் மிகவும் மோசமான வேலையிடம்.

இந்த மோசமான வேலையிடம் பற்றிப் பார்க்கும் முன், இந்தப் போஸ்ட் போர்டிசம் பற்றி மேலோட்டமான கூறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் சில சிறிய தொகுதி உற்பத்தி, அதிக பொருள் உற்பத்தி பொருளாதாரம், குறிப்பிட்ட பயிற்சி மற்றும் நிபுணத்துவம் தேவைப்படும் வேலைகள், புதிய தகவல் தொழில்நுட்பங்கள், நுகர்வுவாதம், சேவைத் துறை மற்றும் வொயிட் காலர் வேலை என சொல்லப்படுகிற மூளை சார் வேலை உழைப்பு அதிகரித்துள்ளது.

துவக்க நிலை பணியிடங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது, நேரத்திற்குப் பொருந்திய உற்பத்தி, வீண் செலவுகளை குறைக்கும் வகையிலான மித உற்பத்தி (Lean Production), தொழிலாளர்கள் ஒன்றிணைவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தொழிலாளியையும் தனியாக உற்பத்தியில் ஈடுபட வைக்கும் Hyper Individualism உற்பத்தி முறை, அவுட்சோர்சிங், சம்பளம் குறைவாக கொடுக்கப்படும் நாடுகளுக்கு மூலதனத்தை மாற்றுவது.கடுமையான உழைப்பே வெற்றி என ஒரு பிம்பத்தை தொழிலாளிகள் மூளையில் புகுத்தி உழைப்பு சுண்டலையும் பணி அழுத்தத்தையும் தொழிலாளர்களை விரும்பி ஏற்றுகொள்ள வைக்கின்ற Hustle culture போன்றவையும் இதில் அடங்கும்.

இதில் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இது மூலதனக் குவியலுக்கான போட்டி, மூலதனம் எல்லைகள் கடந்து செல்வதை பிரச்சினையின் அடிப்படையை மறந்துவிடக் கூடாது. இப்போ இந்தப் புரிதலிலிருந்து நாம் நவீன வேலையிட பிரச்சினைகளை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நெகிழ்வு தன்மை (Flexibility)

நவீன பணியிடங்கள் அனைத்திலும் நெகிழ்வுத் தன்மைபற்றிய பரவலான நடைமுறை இருக்கிறது. அது உறுப்பத்தியில் ஆரம்பித்துத் தொழிலாளர்களை நிர்வகிக்கும் விதம் வரை உள்ளது. இதில் வொயிட் கலர் ஜாபில் ஈடுபடும் மென்பொருள் பொறியாளர்களும் மற்றும் இதர நிர்வாகம் உள்ளிட்ட அலுவலகம் சார்ந்த வேலை செய்யும் ஊழியர்களும் அடங்குவர். உதாரணத்துக்கு இந்த வொயிட் காலர் வேலைக்கு, சென்னையில் 1995 காலகட்டத்தில் போர்ட் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது.

பிறகு ஐந்தாண்டு காலம் கழித்து உலகம் முழுக்க இருக்கும் போர்ட் நிறுவனத்தின் back office வேலைகள் செய்வதற்கான நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. பேக் ஆபீஸ் வேலை என்றால் ஆடிட்டிங், பில்லிங், லாஜிஸ்டிக், பைனான்ஸ் போன்ற நிதி மேலாண்மை மற்றும் டிசைன், தொழிற்சாலை மேலாண்மை, உற்பத்தி செயல்முறை திட்டமிடல், தகவல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து வேலைகளும் பேக் ஆபீஸ் வேலைகள் என்று அழைக்கப்படுகிறது.

இன்று போர்டு நிறுவனத்தில் Back office வேலைக்குச் சுமார் 15,000 பேர் சென்னையில் பணிபுரிகின்றனர். இதில் சுமார் 3500 பேர் ஐடி ஊழியர்கள். இது போன்று ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் 90 களுக்கு பின் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தனர் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் இது போன்ற நிறுவனங்களிலிருந்து அவுட்சோர்சிங் வேலைகள் செய்தன.

90களுக்கு பின் அவுட்கோசிங் மூலம் வரும் நிறுவனங்கள் மற்றும் வேலைகளும் தங்களுடன் இந்தப் போஸ்ட் போர்டிசம் என்கிற உற்பத்தி முறையும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்கின்றனர். அதன் விளைவாக 1995 லிருந்து 2002 வரை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் இவ்வகை நிறுவனங்களுக்குப் பல சட்ட விதிவிலக்கு கொடுத்துள்ளன.

அதில் மிகவும் முக்கியமானவை வேலை நேரம் சம்பந்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போராட்டமே தொழிலாளர் வேலை நேரம் சம்பந்தப்பட்டது தான். தொழிற் புரட்சியின் துவக்க காலத்தில் 15,16 மணிநேரம் சாதாரண வேலை நேரமாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் 12 மணி நேரம் வேலை நேரத்துக்கான போராட்டமாகவும் பின்னர் 8 மணி நேர வேலைக்கான போராட்டமாகவும் மாறியது. வேலை நேரம் 8 மணிநேரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த வேலை நேரம் போக மீதமுள்ள நேரம் அந்தத் தொழிலாளியின் ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் ஆக இருக்க வேண்டும். தொழிலாளி தன் குடும்பத்தினருடன் இருக்க அவருக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோவியத் யுனியன் வேலை நேரத்தை 7 மணி நேரமாக நிர்ணயித்தது.

ஆனால் இன்றைய நவீன வேலையிடங்களில் வேலை நேரம் சாதரணமாக காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு தொழிலாளி வேலைக்கு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் வரலாம் எப்போது வேண்டுமென்றாலும் கிளம்பலாம். ஆனால் வேலை மட்டும் முடித்து இருக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது‌. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வேலை நேரத்தை நிர்வகிக்க வேண்டும்.

உதாரணத்துக்குக் காலை 9 மணி என்றால் மாலை 6 மணிக்கு முடிக்க வேண்டும் என்று அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக industry standing order சட்டங்களிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் பிற தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தி விட்டோம் என்று அவர்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளும் முறையும் உள்ளது.

வேலை நேரம் இப்படி இருப்பது தொழிலாளிக்கு அருமையான ஒன்றாகத் தொன்றும், ஆனால் வேலை நேரம் நிர்ணயிக்கவில்லை என்றால் Overtime allowance கணக்கிடவதில் சிக்கல் உருவாகும். (சில நிறுவனங்கள் OT கொடுப்பதே இல்லை, ஏன் என்றால் சட்ட விதிவிலக்கு மற்றும் self certification முறை). வேலை நேரம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. நிறுவனங்கள் கேட்கும் நேரத்தில் வேலை செய்ய வேண்டும். அதுவே இன்று So called நவீன வேலையிடங்களில் ஊழியர்கள் 12-14 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

இதனால் work – life balance என்கிற ஒன்று இல்லாமலே போய்விட்டது‌ இதில் மிகவும் பதிக்கப்படுவோர் வேலை செல்லும் பெண்கள் தான். அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு shift வேலை செய்கிறார்கள், ஒன்று நிறுவனங்களில் மற்றோன்று ஆண் ஆதிக்க சமுகத்தின் சம்பளம் இல்லாத விட்டு வேலைகள் மற்றும் குடும்ப பாரமரிப்பு முறைகளுக்குள் வேலை செய்கிறார்கள். இந்திய தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) நேர பயன் கணக்கெடுப்பு (TUS) 2024 தரவுகளின் படி, பெண்கள் தினமும் 3 மணி 56 நிமிடங்கள் சம்பளம் இல்லாத வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அதே நேரத்தில், ஆண்கள் வெறும் 24 நிமிடங்கள் மட்டும் வீட்டு வேலைக்காக நேரம் செலவழிக்கின்றனர். இருவருக்கும் இடையே 3 மணி 32 நிமிடங்கள் இது மிகப் பெரிய வேறுபாடு. அதேபோல, பெண்கள் பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் 47 நிமிடங்கள் ஒதுக்குகின்றனர். ஆனால் ஆண்கள் வெறும் 13 நிமிடங்கள் மட்டுமே செலவழிக்கின்றனர். இது நம் பழைய சமூக அமைப்புடன் நவீன வேலை இணையும் போது நடைபெறுவது.

அடுத்த முக்கியமான இந்த Flexibility யில் உள்ள பிரச்சனை Hire and Fire முறை. தேவைப்பட்டால் வேலைக்கு ஆட்கள் எடுப்போம். தேவை முடிந்து விட்டால் வேலையை விட்டு அனுப்புவோம் என்ற முறையை நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. இது சட்டப்படி தவறு ஆனால் நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கி விடுவர்கள்.

உற்பத்தி நெகிழ்வுத் தன்மையுடன் மாறிய பிறகு ஒரு நிறுவனம் அபரிமிதமாக லாபம் அடையும் என்று தெரிந்தால் தேவைக்கு அதிகமாகத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதும் லாபத்தில் சிறு பங்கு குறைந்தால் பெரும் பகுதியானவர்களை வேலையை விட்டு அனுப்புவதும் தொடர் நடைமுறைகளாக நிறுவனங்களில் மாறியது.

ஊழியர்களும் முன்பு போல ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் சூழலும் இல்லை, இது போன்ற நிர்வாகப் பிரச்சனை மற்றும் ஊதிய ஏற்றம் இல்லாமை, பல நிறுவனங்களுக்கு பணி மாறும் தொழிலாளர்கள். அதே போன்று ஒரே அனுபவமும், திறமையும் இருந்தாலும் கூட தொழிலாளர்களுக்குள் சம்பளத்தில் எல்லோருக்கும் ஒரே அளவு சம்பளம் கிடையாது.

இப்படிப்பட்ட சுரண்டலை ஒரு கலாச்சாரமாக இந்த நவீன நிறுவனங்கள் உருவாக்கிப் பரப்பவும் செய்கின்றனர். அதற்கு “சலசலப்பு கலாச்சாரம் (Hustle Culture)என்று பெயர். எல்லாம் ஊழியர்களை எளிமையாகச் சுரண்ட தான்.

எளிய வணிக செயல்பாடு (Ease of Doing Business)

இது போன்ற உற்பத்தியில்/நிறுவனங்களில் ஏற்பட்ட மாற்றங்களை முக்கியமாக just in production உற்பத்தி முறையால் உற்பத்தியில் செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்க அரசின் கொள்கை முடிவுகளாகத் திட்டங்களாகவும் சட்டங்களை மாற்றுவதுமே Ease of Doing என்று அழைக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்கிற போர்வையில். இங்கு வரும் நவீன /புதிய நிறுவனங்களுக்கு நிரந்தர தொழிலாளர்களாக வேலைக்கு வேண்டாம். நிறுவனங்கள் தங்கள் சந்தைக்கு ஏற்ப பொருட்கள் உற்பத்தியை மாற்றவது போல் நேரத்திற்கு ஏற்ற வகையில் தொழிலாளர்களிகளை பணி நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை கொண்டு மாற்ற வேண்டும். அதே வேளையில் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் வேண்டும். அதற்காக நிரந்தரமற்ற தொழிலாளர் பட்டளாம் உருவாக்கப் பட்டுள்ளது.

நிரந்தரமற்ற தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற பெரும் நிறுவனங்களின் விருப்பத்தை நிறைவேற்ற அரசுகள் அதற்கு சட்ட வடிவம் தந்துள்ளன. அதாவது ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் , நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் பணி, இன்டர்ன்சிப், கிக் தொழிலாளிகள் என பல பெயர் வைத்து தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு அரசு அனுமதித்துள்ளது.ஒப்பந்த ஊழியர்களின் பகுதி, மொத்த அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்பில், 1995-96 இல் 10.54 சதவீதம் இருந்தது, தற்போது சுமார் 28 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

இதைக் கேட்கும் போது சரி தானே ஒரு முதலாளி அவருடைய நிறுவனத்தில் அவருக்க ஏற்றார் போல் வேலை ஆட்கள் வைப்பதில் என்ன தவறு என்று தோன்றும். ஆனால், நிரந்தர ஊழியர்கள் பெறும் ஊதியத்தின் பத்து பங்குக்குக் குறைவான அளவு மட்டுமே இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை.

இந்த நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு எந்தப் பணி பாதுகாப்பும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட வேலை முடிந்த உடன் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். சமூக பாதுகாப்போ, தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பதோ கிடையாது. அதே வேளையில் முதலாளிகள் லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி

20ஆம் நூற்றாண்டு மனித குலத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சிகளில் ஒன்று கணினி. உற்பத்தியில் அதன் பயன்பாடு. இணையம், தகவல் தொழில் நுட்பம், அழைப்பேசி, இப்போது AI என தொடர்ந்து பங்களித்து வருகிறது. தொழில்நுட்மாக கணினி மனிதக் கண்டுபிடிப்பின் உச்சம். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் அவை அனைத்தும் தொழிலாளர்களைச் சுரண்டும் கருவிகள் மாற்றப்பட்டன. இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் புதிய வேலையை கொண்டு வந்தன. ஆனால் பல பழைய வேலைகளை ஒழித்தன, high paid high skilled வேலைகளை low paid low skilகளாக மாற்றின. புதிய High skilled வேலைகளை உருவாக்கின.

அதே வேளையில், வேலை தன்மையையும் மாற்றியது‌ உதாரணமாகக் கணினி இல்லாமல் தகவல் தொழில்நுட்ப துறை இல்லை. ஆனால் Desktopக்கு மாற்றாக கையடக்க laptop வந்தவுடன் பணி இடத்திற்கு செல்லாமல் work from home போன்ற இருக்கும் இடத்தில் இருந்தே வேலைகள் செய்ய (Remote) வாய்ப்பு வந்தது‌. வேலை வந்தவுடன் எந்த நேரத்திலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. இன்னும் ஒரு படி மேலே அழைபேசி வந்தவுடன் எந்த நேரமும் வேலை சம்பந்தப்பட்ட meeting/call சேர வேண்டும். இதற்காகப் பல நிறுவனங்களின் mobile appகள் இன்றை ஊழியர்கள் அலைபேசியில் கட்டாயப் படுத்தி இறக்கி வைத்துள்ளன.

ஒரு விதத்தில் பார்த்தால் இவையாவும் நிறுவனங்கள் தொழிலாளர்களை கண்காணிக்க உதவுகிறது. தொழிலாளர்கள் அழைபேசி data க்களை தொழிலாளர்கள் அறியாமலேயே நிறுவனங்கள் திரட்டுகின்றன. இதனை பல வழிகளில் நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் எதிராக பயன்படுத்த முடியும். உதாரணமாக ஊழியர் யார் உடன் பேசுகிறார், அந்தத் தகவல் வைத்துத் தொழிலாளர் உரிமைகளை குறைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கலாம்.

இன்றைய நவீன வேலை இடத்தில் ஒரு தொழிலாளி எத்தனை மணிக்கு உள்ளே வருகிறார். எவ்வளவு உற்பத்தி செய்கிறார். அவர் உற்பத்தி பொருளின் எண்ணிக்கை எவ்வளவு. அவர் எவ்வளவு நேரம் இடைவேளை எடுத்துள்ளார் போன்ற அனைத்து தகவல்களையும் நவீன தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மிகவும் எளிதாகத் திரட்டுகின்றனர். ஆதலால் ஒரு தொழிலாளி வேலை செய்யும் போது தொடர்ந்து கண்காணிப்பில் தான் உள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு சிறிய அளவு அதிக திறன் (high skilled) வேலை வாய்ப்பு தந்தாலும், மிக மிகப்பெரிய அளவு, மிகவும் அபாயகரமான வேலைகள்(precarious job) அதாவது எந்தச் சமூக பாதுகாப்பும் இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் வேலைகள் உதாரணத்திற்கு Swiggy மற்றும் Zomato போன்ற பல அலைபேசி appகள் சார்ந்த வேலைகள். இதைப் பிளாட்பார்ம் ஜாப்ஸ் என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட வேலைகள் உருவாகி இருந்தாலும் அந்த வேலைகளில் எந்தச் சமூக பாதுகாப்பும் கிடையாது‌. காப்பீடு இல்லை. மிக அதிக வேலை நேரம் மற்றும் மிகவும் குறைந்த கூலி.

கூலி  கூட நிர்ணயிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களைத் தொழிலாளியே இல்லை என பிளாட்பார்ம் நிறுவனங்கள் கூறுகின்றனர். அவர்களைப் பார்ட்னர் என்று தான் செல்கிறது. இந்தப் பிளாட்பார்ம்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கமாகச் சென்று அரசிடம் முறையிட்டால் இவர்களைத் தொழிலாளர்களே இல்லை ‌என்று‌ சொல்லிவிட்டது. இப்படிப்பட்ட Gig work இன்று பரவலாகப் பல துறைகளிலும் வந்து கொண்டிருக்கிறது. அதாவது மூலதனம் தன் லாபத்திற்கான போட்டியில் நிரந்தரமற்ற தொழிலாளிகளைக் கூட வைத்துக் கொள்ளவதற்கு இப்போது தயராக இல்லை.

அதனால் Freelancing (Gig Workers) முறையைத் தங்களுக்கான லாபத்திற்கான ஒரே வழியாக பார்க்கிறது.அதற்கு உதாரணமாக Gig Workers இன் அசுர வளர்ச்சி 2020-21 ஆம் ஆண்டில் நாட்டில் Gig தொழிலாளர்களின் எண்ணிக்கை, பெண்கள் உட்பட, 77 லட்சமாக இருந்தது, இது 2029-30 க்குள் 23.5 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று பரவலாகப் பேசப்பட்ட பேசப்படுகிற தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு) புரட்சிகரமான தொழில்நுட்பம். இன்றைய காலத்தில் IoT , இணையம், சமூக ஊடகங்கள் போன்று பல தொழில்நுட்பங்களால் பல Petabyte கணக்கான டேட்டாக்கள் தினமும் உற்பத்தி ஆகிறது. அவைகளை ப்ராசஸிங் செய்து அதிலிருந்து சந்தைக்கும், நிறுவனத்துக்கும், முதலாளிகளுக்கும் பயன்படுகிற தகவல்களை எடுப்பதற்கு தேவையான AI மாடல்கள் உருவாகி வந்துள்ளன.

இதற்கு முன்பு மனிதர்கள் கையால் செய்த data processing வேலைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு சில நிமிடங்களில் செய்து விடலாம். இந்த டேட்டாக்களில் ஏற்பட்ட அளவு மாற்றம் பண்பு மாற்றமாக AI மாடல்கள் வந்தன.இப்படிப்பட்ட தொழில்நுட்பம் சமுதாயத்தில் தொழிலாளர்களை மேலும் வேட்டையாடுவதற்கும் சுரண்டுவதற்கு பயன்படுத்துகின்றது.

சில நாட்களுக்குள் கணினி போன்று தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு பரவலாக அனைத்து துறைகளிலும் வந்து விடும். ஆனால் அந்த மாற்றத்தின் நன்மைகளை விட தீமைகள் அதிகமாக இருக்கும் உதாரணமாக.

ஒரு வேலையை ஒரு மனிதன் 8 மணி செய்து முடிக்க முடியும் என்றால், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அதே வேலையை 4 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும். அப்படி என்றால் மீதி இருக்கும் நான்கு மணி நேரத்திற்கு தொழிலாளி வேலை என்னவாகும் என்று கேள்வி உள்ளது ? இது நியாயமாக அந்தத் தொழிலாளிக்கு மேலும் ஒய்வு நேரம் தர வேண்டும். ஆனால் இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் அப்படியொரு வாய்ப்புக்கு இடமே இல்லை. ஒன்று வேலை இழப்பார்கள் அல்லது கூலி கிடைக்காது.

அண்மையில் எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் பத்திரிக்கையில் (EPW) இல் வந்த ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் தொழிலாளர் மத்தியில் திறமை மேம்பாடு மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு உள்ளது என்று சுட்டி காட்டப்பட்டு உள்ளது. எப்படி மூன்றாம் தொழிற் புரட்சியில் கணினிகளின் வருகையால் ப்ரோகிராம் ரோபோட்கள் தொழிற்சாலை பணிகளில் லமிகப்பெரிய மாற்றங்களை உண்டாகியதோ அதே போன்று செயற்கை நுண்ணறிவு அலுவலகப் பணிகளில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.

அண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆய்வு உலகளவில் சுமார் 7.5 கோடி வேலைவாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியின் காரணமாக முழுமையாகத் தானியமயமாக்கப்படுவதற்கான அபாயத்தில் உள்ளன என எச்சரித்துள்ளது. இது நவீன தொழில் நுட்பத்துறையில் உள்ள தொழிலாளர்களை தங்கள் வாழ்வாதரத்திற்கான போட்டியில் மேலும் மோசமான இடத்திற்கு தள்ளுகிறது.

அப்போ என்னா தான் Bro வழி!

இவ்வளவு பேசி விட்டோம் மூலதன குவியலுக்கான போட்டி, நிதி மூலதனத்தின் எல்லையற்ற தன்மை, உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் அதன் மூலம் உற்பத்தி கருவி மற்றும் உற்பத்தி நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள். இதற்காக மாற்றப்பட்ட அரசின் சட்டதிட்டங்கள் எல்லாம் பேசி விட்டோம். .

இவையெல்லாம் ஒருவிதத்தில் முதலாளிகளின தொழிலாளர்கள் மீதான முதலாளிகளின் சுரண்டலுக்கும் பயன்படுகிறது என்று சொல்லிவிட்டோம் அப்போ என்னதான் தீர்வு என்று கேட்கலாம்

இதற்கு ஒரே வழி கேட் “பிக்கெட் மற்றும் ரிச்சர்ட் ஜி. வில்கின்சன் எழுதிய “உள் நிலை: சமத்துவ சமூகங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, நல்லறிவை மீட்டெடுத்து, அனைவரின் நல்வாழ்வையும் எவ்வாறு மேம்படுத்துகின்றன” என்ற புத்தகத்தில் கூறுவது போன்று இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் மீண்டும் கூட்டு பேரம் அதிகரிக்க வேண்டும்.

அதாவது தொழிற்சங்கம் வலுவாக வேண்டும். தொழிற்சங்கம் வலுவாகும் பட்சத்தில் ஏழை தொழிலாளர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான வருமான வித்தியாசம் குறையும். வ

பணியிட பிரச்சனைகளை தீர்க்க முடியும் அதன் முலம் தொழிலாளர்கள் நலம் பெற முடியும் என்று கூறி உள்ளார்.

கூட்டு பேரமும் தொழிற்சங்கங்களும் வலுப்பெற வேண்டும். தொழிற்சங்கம் வலுப்பெறுவது தனிநபர் சம்பளம் உயர்வு மற்றும் பணியிட நலன்கள் சார்ந்தது மட்டும் இல்லை. உலகம் முழுவதும் 70 களுக்கு பின் நவ தாராளமய பொருளாதார கொள்கை எழுச்சிக்கு பின் பரவலாகப் பல வலது சாரி அரசுகள் மற்றும் இயக்கங்கள் பல நாடுகளில் வலுப்பெறுவதற்கும் வலது சாரி சிந்தனைகள் வலுப்பெறுவதற்கும் தொழிலாளர் இயக்கம் சரிவை சந்திக்கவும் ஒரு முக்கிய காரணம்.

தொழிற்சங்க வளர்ச்சியுடன் வருகிற முற்போக்கு அரசியலும் சமூகத்துக்கு முக்கியமானவை. அவர்கள் கொண்டுவரும் முற்போக்கான அரசியல் ஒருபுறம் வலது சாரி அரசியலுக்கு மிகப்பெரிய பின்னடைவுகளையும் தரும். அப்போ சங்கம் கட்டுவதில் என்ன சிக்கல் என்று உடனே கேள்வி வரும்?

தொழிற்சங்கங்கள் இருக்கின்றன ஆனால் தொழிலாளர்கள் அமைப்பாக திரள்வதில் சிக்கல் உள்ளது. இது தொழிலாளர்களின் பிரச்சினை இல்லை. ஏற்கனவே இந்தக் கட்டுரையில் பேசியது போன்று புதிய தாராளமயக் கொள்கை நவீன தொழில் முறைகளில் தொழிலாளர்களைத் தொழிலாளர்களாகவே உணராமல் வைத்துக் கொள்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்கின்றது. அதை உடைப்பதற்கு ஒரே வழி வர்க்க உணர்வை தொடர்ந்து புதிய வழிகளில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.”அப்படியே செய்வோம்!!!”

கட்டுரையாளர் தோழர் பரணி UNITE (IT யூனியன்) மாநிலத் தலைவர் 

Leave a Reply