இணையத்தை முடக்குவதில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா


2023 ஆம் ஆண்டு இணைய முடக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் அதிகரித்துள்ளது எனவும் இணைய முடக்கத்தை அமல்படுத்தும் முதன்மை நாடாக இந்தியா உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

உலகவிலான இணைய முடக்கம் குறித்து ஆய்வு செய்து இணைய முடக்கம் 2023 : ஜனநாயக நெருக்கடி, வளர்ந்து வரும் வன்முறை என்ற தலைப்பில் ஆக்சஸ் நவ் (Access Now) கீப் இட் ஆன் (Keep It On) ஆகிய இரு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை இதனை குறிப்பிட்டுள்ளன.


2023 ஆம் ஆண்டு 39 நாடுகளில் 283 முறை இணைய முடக்கங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு முதல் இணைய முடக்கத்தை கண்காணிக்க துவங்கியதில் இருந்து இதுவே மிக அதிக இணைய முடக்கம் செய்யப்பட்ட ஆண்டாக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2022 ஆண்டுடன் ஒப்பிடும் போது 41 சதவீதமும், 2019 உடன் ஒப்பிடும் போது 28 சதவீதமும் 2023 ஆம் ஆண்டு இணைய முடக்கம் அதிகரித்துள்ளது.


இயற்கைப் பேரழிவு காலத்தில் இணைய முடக்கம் அமல்படுத்தியதை விட வன்முறை காலங்களில் அதிகமாக இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜனநாயக மற்றும் சர்வாதிகார ஆட்சிகளில் மனித உரிமைகளை நசுக்குவதற்கான சாதகமான கருவியாக இந்த இணைய முடக்கங்கள் உள்ளன.

பாலஸ்தீனம், மியான்மர், சூடான், ரஷ்யா, உக்ரைன் என அனைத்து இடங்களிலும் இணைய முடக்கத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதன் மூலம் தங்கள் தவறுகளை மூடி மறைத்து குற்றத்திற்கு பொறுப்பேற்பதில் இருந்து விலகி கொள்கின்றனர். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


உலகளாவிய காரணங்கள்

கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் இணைய முடக்கங்கள் அதிகரித்தன. அவற்றில் அரசுக்கு எதிரான போராட்டங்கள், பள்ளி தேர்வுகள் மற்றும் தேர்தல்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. இவற்றில் அரசுக்கு எதிரான போராட்ட காலத்தில் இணைய முடக்கத்தை ஏற்படுத்துவது கடந்த காலத்தை விட மிக அதிகமாக உள்ளது.


கென்யா, மொசாம்பிக், நேபாளம் மற்றும் சுரினாம் போன்ற நாடுகள் கடந்த ஆண்டை விட இருமடங்காக இணைய முடக்கத்தை அதிகரித்துள்ளன. இவ்வாறான முடக்கங்கள் ஏற்கனவே ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்துவகை சமூக மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் இணைய முடக்கத்திற்கு எதிராக சட்டரீதியிலான வெற்றியை அடைந்து இணைய இணைப்பை கொடுத்து முன்னேற்றதை கண்டன. இதற்காக உலகம் முழுவதும் இருந்து 334 க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.


வேண்டுமென்றே இணைய முடக்கம் செய்த இந்தியா

வேண்டுமென்றே இணைய முடக்கங்களை செய்வதில் உலகளவில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது என வெளியிடப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 116 இணைய முடக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மணிப்பர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ளூர் அளவிலான இணைய முடக்கங்களை விட பிராந்திய அளவில் ( மாநில அல்லது சில மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ) அதிகமாக இணைய முடக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆறாவது ஆண்டாக இந்தியா நம்பர் 1 இடத்தில் உள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 49 ஆக இருந்த இணைய முடக்கம் 2023 இல் 17 ஆக குறைந்துள்ளது. ஆனால் இணைய முடக்கம் நாடு முழுவதும் பரவலடைந்து நீண்ட நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட நடைமுறை அதிகரித்துள்ளது.

ஐந்து நாட்கள் அல்லது அதற்கு மேல் அமல்படுத்தப்பட்ட இணைய முடக்கம் 2022 ஆம் ஆண்டு 15 சதவீதத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.


2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை இணைய தளங்களை முடக்கும் வகையில் 7,502 உத்தரவுகள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மேலும் இந்தியாவின் புதிய தொலைத்தொடர்பு சட்டம் இணைய முடக்கங்களை மேற்கொள்ள அதிக அதிகாரங்களை இந்திய அரசுக்கு வழங்குகிறது.

இணைய முடக்கத்தால் பொருளாதார பிரச்னை


  • மணிப்பூர் மாநிலம் முழுவதும் 212 நாட்கள் இணைய முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இது சுமார் 32 லட்சம் மக்களை பாதித்தது. பஞ்சாபில் தொடர்ந்து நான்கு நாட்கள் இணைய முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இது சுமார் 2.7 கோடி மக்களைப் பாதித்தது.

நான்கு நாட்களுக்கு மேலான தொடர் இணைய முடக்கத்தால் கடுமையான பொருளாதார பிரச்சனைகளும் ஏற்பட்டது. மக்களை வேலையின்மைக்கு தள்ளியது மற்றும் நாட்டில் புதிய முதலீட்டு சூழலை பாதித்தது.

  • இந்தியாவில் அமல்படுத்தப்படும் ஒரு நாள் இணைய முடக்கம் 379 பேரை வேலையில்லாமல் ஆக்கலாம் என கீப் இட் அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
  • குறிப்பாக இந்த இணைய முடக்கங்கள் விளிம்புநிலை சமூக மக்களை அதிக அளவு பாதிக்கிறது அதனுடன் அவர்களின் புதிய வருவாய் வழிகள் மற்றும் வாய்ப்புகளையும் தடுக்கின்றது.
  • இதனால் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி சமமான டிஜிட்டல்மயமாக்கலுக்கான முயற்சிகளை பாதிக்கிறது.
  • இணைய முடக்கங்கள் ஒவ்வொரு தனி நபரின் வாழ்வாதாரம் முதல் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வரை அனைத்து மட்டங்களிலும்ஆழமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது என ஆக்சஸ் நவ், கீப் இட் ஆன் ஆகியவற்றின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்புகள் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மக்கள் குழுக்களை பாதுகாப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் இணைய முடக்கம் டிஜிட்டல் பிளவை ஆழமாக்குகிறது மற்றும் சமமான மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல்மயமாக்கலுக்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் செயல்பாடு
இந்தியத் தந்திச் சட்டம், 1885 இன் கீழ், 2017 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநிறுத்த (பொது அவசரநிலை & பொதுப் பாதுகாப்பு) விதிகள் ஒரு பிராந்தியத்தில் ( மாநிலத்தில்) 15 நாட்கள் வரை தற்காலிக இணைய முடக்கத்தை அனுமதிக்கின்றது. அக்னிபத் மற்றும் விவசாயிகள் போராட்டங்களின் போது இந்திய அரசு இணைய முடக்கத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

(இந்த செய்தி தி வயர் இணையத்தில் இருந்து எடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.)

Leave a Reply