அதானி மீதானா ஊழல் குற்றச்சாட்டு வெளியான பிறகு, கென்யா அரசுடன் கடந்த மாதம் அதானி நிறுவனம் மேற்கொண்டு இருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த ஒப்பந்தங்களை அந்நாட்ட அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெயில ஒடிங்கா மோடி தான் அதானே தங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் அதன் பிறகு அவருக்கான ஒப்பந்தங்களை கொடுத்ததாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மோடி பிரதமர் அதிகாரத்தின் மூலம் அதானியை உலக பணக்காராக மாற்றி விருகிறார். அவரது தொழில்துறைக்கு தொடர்ந்து உதவி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அவரது பேட்டி உறுதி செய்தது.
அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை கென்யா மட்டும் இன்றி அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள இலங்கை மற்றும் வங்கதேசத்திலும் பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
இலங்கை அரசின் கடந்த ஆட்சியில் அதானியுடன் சூரிய மின் உற்பத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி தற்போதைய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஒப்பந்தம்
கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியதில் இருந்தே தொடர் விமர்சனங்களும் குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றது. இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் பூனேரியில் காற்றாலை மின் திட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி சுமார் 3,700 கோடி ரூபாய்கும் ($442 மில்லியன் டாலர் ) அதிகமாக முதலீடு செய்துள்ளது.
இதற்கான டெண்டர்களுக்கு வெளிப்படையாக அழைப்பு கொடுத்து நடத்தவில்லை, பின்கதவு வழியாக அதானி இலங்கைக்குள் நுழைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை பல அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள. 2022 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்தே அதானி குழுமத்திற்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் (CEB) உயர் அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அதிகாரி தனது அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு ராஜினாமா செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த இந்த திட்டத்தை 2023 இல் அமைந்த ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் முறையான விசாரணை இன்றி முன்னெடுத்தது. மேலும் இலங்கை அரசு தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்திய இந்த ஒப்பந்தத்தை அரசுக்கும் – அரசுக்கும் இடையேயான ஒப்பந்தமாகவே ராணில் விக்ரமசிங்க அரசு கருதுகிறது என அவரது அவையில் அங்கம் வகித்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கடந்த காலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கத்திலும் சர்ச்சையை கிளப்பிய ஒப்பந்தம்
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது அதானி நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுக்க ஒப்பந்தம் போட்டது. அப்போதே வங்கதேசத்தில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இலங்கை போல வங்கத்திலும் மின் உற்பத்திக்கான டெண்டர் முறையாக நடைபெறவில்லை. கிட்டத்தட்ட நேரடியாகவே அதானிக்கு ஹசீனா அரசு இந்த டெண்டரை வழங்கியதாக கூறப்படுகிறது.
அரசா? தனியாரா?
கொழும்பை தளமாகக் கொண்ட பொருளாதார பத்திரிக்கை ( Economynext ) செய்தி இணையதளத்தின் ஆலோசகர் ஆசிரியர் ஷிஹார் அனீஸ் “ஆரம்பத்தில் இருந்தே அதானியின் சூரிய மின் உற்பத்தி திட்டம் இந்தியா – இலங்கை அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தமா அல்லது தனியார் துறை முதலீடா என்பதில் தெளிவின்மை உள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் அதானி நிறுவனம் குறித்து எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் பெயர் தெரிவிக்காத சில அதிகாரிகள் இந்தியா – வங்கதேசம் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் விநியோகம் நடக்கிறது தேவை ஏற்படும் போது தனியார் நிறுவனத்துடன் தலையிடும் என தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா வழியாக அதானி நிறுவனமே நிலக்கரி கொண்டு வருகிறது. அதற்காக மிக அதிக கட்டணத்தை அதானி நிறுவனம் வசூலிப்பதாகவும் அந்நாடு குற்றம் சாட்டி இருந்தது. இதன் அடிப்படையில் தான் வங்கதேச அரசால் மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாத சூழல் எழுந்தது. அதானி நிறுவனமும் மின்சாரம் வழங்குவதை நிறுத்த போவதாக மிரட்டியது.
இந்த சூழலில் அதானி குழுமத்துடனான 1,600 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த டாக்கா உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. தற்போது அதானி லஞ்ச விவகாரம் வங்கதேசத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேசமும் அதானி குழும ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானியின் முதலீட்டை பதுகாக்கும் மோடி
தற்போதிய இடதுசாரி ஜனாதிபதி திஸாநாயக்கவின் அரசு ஜனாதிபதி தேர்தலின் போதே அதானியுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி கொடுத்து இருந்தார். அவர் வெற்றி பெற்ற பிறகு இந்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை சென்று ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அதானியுடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துவிடாமல் தடுப்பதற்கானது மோடி அதானிக்காக கென்யா உள்ளிட்ட பல நாடுகளில் முதலீடு செய்ய உதவி செய்துள்ளார். அதன் அடிப்படையின் அதானியின் முதலீட்டை பாதுகாப்பதற்காக இந்த சந்திப்பை எஸ். ஜெய்சங்கர் நடத்தியுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.