ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக பிரிக்ஸ்!

 உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போல கடன் வாங்கும் நாட்டை முடக்கும் வகையிலான கெடுபிடிகளை விதிக்காமல் முழுக்க வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கடன்களை வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஜனாதிபதி சிரில் ரமபோசா தலைமையில் பிரிக்ஸ் மற்றும் ஆபிரிக்கா – வேகமான பரஸ்பர நிலையான வளர்ச்சி மற்றும் பலதரப்புக்கான உள்ளடக்கிய கூட்டாண்மை என்ற கருப்பொருளில் மூன்று நாள் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு ஆகஸ்ட் 24, வியாழன் அன்று ஜோகன்னஸ்பர்க்-II பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதுடன், உலக அரசியலில் ” பல தரப்பு உள்ளடக்கிய பன்முகத்தன்மைக்கு” அழைப்பு விடுத்தது.அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு புதிய நாடுகள் இணைப்பையும் உறுதி படுத்தியது.ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.இம்மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளைத் தவிர, 60 க்கும் மேற்பட்ட நாடுகளும் உச்சிமாநாட்டில் பங்கேற்றன. ( எண்ணெய் வளம்மிக்க நாடுகளான சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து இருப்பது அவர்கள் அமெரிக்க ஏகாதிபதியத்தில் இருந்து வெளிவர முயற்சிப்பதை காட்டுகிறது)

மேலும் புதிய உறுப்பு நாடுகள் பிரிக்ஸ் நாடுகளுடன் நெருங்கிய வர்த்தகத்தை மேற்கொடுவந்த நட்புநாடுகளாக இருக்கின்றன.அர்ஜென்டினா இணைய பிரேசில் அதிபர் கோரினார்.எகிப்து நாடானது இந்திய மற்றும் ரசியா உடன் நல்ல வணிக உறவை பேணிவருகிறது.ஈரான் ரஷ்யாவை போல் அமெரிக்கா வினால் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வருகிறது.

புதிய உறுப்பினர்கள் இணைந்த பிறகு இக்கூட்டணி உலகப் பொருளாதாரத்தில் 36% மற்றும் உலக மக்கள் தொகையில் 47% பிரதிநிதித்துவப்படுத்தும்.ஒத்த கருத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் மேலும் கூட்டணி விரிவாக்கம் செய்வதற்கான செயல்முறையை குழு முடிவு செய்துள்ளதாக ரமபோசா உறுதிப்படுத்தினார்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உச்சிமாநாட்டின் முடிவில் கூட்டுப் பிரகடனம் வலியுறுத்தியது. சர்வதேச வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறியவும், ரஷ்யாவில் நடைபெறவுள்ள அடுத்த உச்சிமாநாட்டில் தங்கள் வெற்றியைப் பற்றி அறிக்கை செய்யவும் பிரிக்ஸ் உறுப்பினர்கள் தங்கள் மத்திய வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக மாநாட்டின் பிரகடனம் உலகெங்கிலும் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் பற்றிய கவலையை வெளிப்படுத்தி அதற்கு அமைதியான வழியில் தீர்வுகாண அழைப்பு விடுத்ததுள்ளது.குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்தின் காரணமாக ஐ.நா சாசனத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக சில நாடுகள் “ஒருதலைப்பட்ச தண்டனை நடவடிக்கைகளை எதிகொள்கின்றன எனவே ,உலக அரசியலில் அனைவருக்குமான இடத்தை உறுதிப்படுத்த வளர்ந்து வரும் நாடுகளை இணைத்து அதன் ஜனநாயக பூர்வ நடவடிக்கையை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்று கூறியதோடு சமமான பாரபட்சமற்ற விதிகளோடு வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வார்ச்சியடைந்த நாடுகளுக்கான அணுக்களை உலக வர்த்தக அமைப்பு உறுதி படுத்தவேண்டும் என்றும் அதற்கான சீர்திருத்தங்களையும் வலியுறுத்தியது.

மேலும் கல்வி சேவை,வர்த்தகத்தை மேம்படுத்துதல், வறுமையை நீக்கம்,புதிய ஆற்றல்களை வளத்தெடுத்தல் ,பருவநிலை மாற்றத்தால் உற்பத்தி பாதிப்பு மற்றும் உணவு பஞ்சம் தொற்றுநோய் பரவுவதை தடுத்தல் ஆகியவற்றிற்ற்கு உலக அரசியலில் உள்ள பதற்றங்களை நீக்க பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் திரும்பி வரும் அமைதியை சுட்டிக்காட்டி வரவேற்றது.

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளை உள்ளடக்கிய ஜி 20 கூட்டமைப்பை சர்வதேச பொருளாதார மற்றும் நிதி பங்களிப்பில் பலதரப்பு ஒத்துழைப்புடன் உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையிலும் 2024 ஆம் ஆண்டு பிரேசில் தலைமையிலும் 2025 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா தலைமையிலும் ஜி -20 நடைபெறும் போது உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்களை வெளிப்படுத்தி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என கோரியது .

பங்களாதேஷ், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகள் புதிய வளர்ச்சி வங்கி (NBD) இல் புதிய உறுப்பினர்களாக இணைந்திருப்பதை பிரிக்ஸ் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.மேலும் இந்த புதிய வளர்ச்சி வங்கியானது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போல கடன் வாங்கும் நாட்டை முடக்கும் வகையிலான கெடுபிடிகளை விதிக்காமல் முழுக்க வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கடன்களை வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

மேலும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தில் தங்களது பொருளாதார வளர்ச்சியை உறுதி படுத்துவதுடன் தாங்களும் அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்த வளர்ச்சியை எட்டுவது எனவும் காலநிலை மாற்றத்தால் உருவாக்கி வரும் உணவு பஞ்சத்தை எதிகொள்ள இனைந்து செயல் பட வேண்டும் என்றும் ஒற்றுமையாக முனேற்றத்தை நோக்கி அமைதியான வழியில் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிற வகையிலான ஆயுத பரிமாற்றத்தை அனுமதிக்க முடியாது எனவும் எந்த ஒருவகையில் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெளிவுபட கூறப்பட்டது.

நேட்டோ ராணுவ கூட்டமைப்பு மூலமும் பொருளாதார தடைகள் மூலமும் வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை அமெரிக்கா மிரட்டி ஒடுக்குவது போல அல்லாமல் அனைத்து நாடுகளை உள்ளடக்கி பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி,உலக அரசியலில் அனைத்து நாடுகளின் பங்கையும் உறுதிப்படுத்தும் மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக பிரிக்ஸ் கூட்டமைப்பு மேலும் விரிவடைந்துள்ளது.

Leave a Reply